காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணையை, ஜம்மு-காஷ்மீர் போலீஸாரிடமிருந்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஏற்றுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் தில்லியில் புதன்கிழமை கூறியதாவது: புல்வாமாவில் கடந்த வாரம் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணையை, ஜம்மு-காஷ்மீர்
போலீஸாரிடமிருந்து என்ஐஏ ஏற்றுக் கொண்டுள்ளது.
அதையடுத்து, அந்தச் சம்பவம் குறித்து புதிய வழக்கை என்ஐஏ பதிவு செய்தது.
புல்வாமாவில் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை என்ஐஏ-வின் பொது இயக்குநர் ஒய்.சி. மோடியும், பிற அதிகாரிகளும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அவரிடம் உள்ளூர் போலீஸாரும், சிஆர்பிஎஃப் அதிகாரிகளும் தாக்குதல் குறித்த விவரங்களை எடுத்துரைத்தனர்.
குண்டுவெடிப்பு நடத்தப்பட்ட பகுதியிலிருந்து தடயங்களை ஏற்கெனவே சேகரித்துள்ள என்ஐஏ அதிகாரிகள், தாக்குதல் தொடர்பாக போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மூத்த காவல்துறை அதிகாரிகள், உளவுத் துறை மற்றும் ராணுவ அதிகாரிகளை என்ஐஏ அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்தியதுடன், அவர்களிடமிருந்த அனைத்து ஆதாரங்களையும் சேகரித்தனர்.
புல்வாமா தாக்குதல் எவ்வாறு திட்டமிடப்பட்டது என்பது குறித்தும், அந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்பட்டது என்பது குறித்தும் என்ஐஏ விசாரணை நடத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.