காத்மாண்டு: நூறு ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்து நேபாள நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 13 லட்சம் பேர் நேபாளத்துக்கு சுற்றுலா சென்று வருகின்றனர்.
நேபாளத்தில் அவர்களது உள்நாட்டு பணத்துக்கு நிகராக இந்திய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதை, அந்நாட்டு அரசு ஆய்வின் மூலம் கண்டுகொண்டது.
எனவே இதைக் கட்டுப்படுத்தும் விதமாக 100 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய நோட்டுகளுக்கு தடை விதிப்பது என்று நேபாள நாட்டு அமைச்சரவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்மானித்தது.
ஆனால் இந்த முடிவுக்கு உள்நாட்டில் வாழும் இந்தியர்களும், இந்திய சுற்றுலா பயணிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பெரிய மதிப்பிலான இந்திய ரூபாய் நோட்டுக்கு தடை விதித்தால் அன்னியச் செலாவணியாக டாலர் அல்லது யூரோக்களை வாங்குவதில் பண இழப்பும் சிரமும் ஏற்படும். அதனால் இந்த முடிவை அரசு பரிசீலிக்க வேண்டும் என பலதரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தது.
இந்நிலையில் நூறு ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்து நேபாள நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டின் மத்திய வங்கியான நேபாள ராஷ்டிர வங்கி ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ருபாய் 200, 500, 2000 ரூபாய் மதிப்பிலான இந்திய ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டுக்கு அரசு தடை விதிக்கிறது
எனவே உள்நாட்டில் இருக்கும் வங்கிகள், நிதி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் 100 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளை வைத்திருக்க கூடாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.