விழுப்புரம் மாவட்டத்தில், காலியாக உள்ள கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு நேர்காணல் தேர்வு மே 10-இல் தொடங்குகிறது.
இது குறித்து, ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு, விழுப்புரம் மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கான, பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் தேர்வு, விழுப்புரம் மண்டலத்தில் மே 10 முதல் மே 17 வரை நடக்கிறது.
விழுப்புரம் திருவிக வீதி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தினசரி காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையும், 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் நடைபெறுகிறது.
தகுதியுள்ளவர்களுக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அழைப்பாணை அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள நாளில் அழைப்பாணை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முக அழைப்பாணை கிடைக்கப் பெறாதவர்கள் www.tn.gov.in என்ற வலைதளத்திலிருந்து மே 6 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேர்முக அழைப்பாணைகளை மே 8, 9 ஆகிய நாள்களில் விழுப்புரம் மாவட்ட மண்டல இணை இயக்குநர் அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.
நேர்முக அழைப்பாணை இல்லாதவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.