ரூ.1,510கோடியில் பாதாள சாக்கடை திட்டம்
ரூ.1,510கோடியில் பாதாள சாக்கடை திட்டம்
புதுச்சேரி:நவம்பர் 1ம் தேதி புதுச்சேரி விடுதலை நாளாக அறிவிக்கப்படுவதுடன், ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ரூ. 1,510 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் துவங்கப்பட உள்ளது என, முதல்வர் ரங்கசாமி பேசினார்.உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் நடந்த சுதந்திர தின விழாவில் முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியேற்றி வைத்து பேசியதாவது:புதுச்சேரியில் விவசாய பயிர்களுக்கு முழுமையான காப்பீடு அளிக்க, மத்திய அரசு நிதியுதவியுடன் தேசிய பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தும் பணி வேளாண் துறைக்கு அளிக்கப்பட்டுள்ளது.ரேஷன் கடைகளில் பொருட்கள் வரத்து குறித்து எஸ்.எம்.எஸ்.,மூலம் நுகர்வோர் அறிந்துகொள்ளும் ஒளிவு மறைவற்ற தன்மை கடைப்பிடிக்கப்படும்.மத்திய அரசின் குறு சிறு நடுத்தர தொழிற்சாலைகள் அமைச்சக நிதியுதவியுடன் காலாப்பட்டில் தொழில்நுட்ப வளர்ச்சி மையம், காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் சுவை மற்றும் நறுமண மேம்பாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது.காரைக்காலில் 25 ஏக்கர் பரப்பளவில் ஊரக பொருளாதார மண்டலம் துவங்கப்பட உள்ளது. புதுச்சேரி, மாகி, ஏனாம் பிராந்தியங்களில் மூன்று கடற்கரை காவல் நிலையங்கள் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.தேங்காய் திட்டு மீன்பிடி துறைமுகத்தில் தற்போதுள்ள தடுப்பு மதிற் சுவருக்கு எதிரில் புதிய படகு தங்குதளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
ரூ. 24.45 கோடியில் அரும்பார்த்தபுரம் ரயில்வே கிராசிங் அருகே மேம்பால இணைப்பு சாலை, ரூ. 43.15 கோடியில் காமராஜர் சாலை, பாலாஜி தியேட்டர் அருகில் இருந்து மறைமலையடிகள் சாலையில் உள்ள நியூடோன் தியேட்டர் வரை உப்பனாறு கால்வாய் மீது மேம்பாலம் கட்டப்பட உள்ளது. ரூ. 21.20 கோடியில் மேற்கு புறவழிச்சாலை முதற்கட்டமாக போடப்பட உள்ளது. ரூ. 23 கோடி செலவில் காமராஜர் மணிமண்டபம் கட்டுமான பணி மீண்டும் துவங்கப்பட உள்ளது.புதுச்சேரி நகர மற்றும் புறநகர் பகுதியில் ஒருங்கிணைந்த குடிநீர் வினியோக திட்டம் ரூ. 307.46 கோடியிலும், காரைக்காலில் ரூ. ௧௬௧.௪௩ கோடியில் குடிநீர் திட்டமும் துவக்கப்படுகிறது. மேலும்,ரூ. 15.50 கோடியில் நெல்லித்தோப்பு, ராஜா நகர், உருளையன்பேட்டை தொகுதி சுற்றுப்புறங்களில் குடிநீர் வினியோக அமைப்பு பணிகள் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ரூ. 1,510- கோடியில் பாதாள சாக்கடை திட்டம், சாலைகள், பாலங்கள், நீர்ப்பாசனம், குடிநீர் வினியோக பிரிவுகளில் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. புதுச்சேரியிலிருந்து கடலுாருக்கு ரயில்பாதை அமைப்பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படும்.கிராமப்புற இளைஞர்கள் பயனடையும் வகையில் வில்லியனுாரில் இலவச ஓட்டுனர் பயிற்சி பள்ளி விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்தாண்டு முதல், நவம்பர் 1ம் தேதி புதுச்சேரியின் விடுதலை நாளாக அறிவித்து, அன்றைய தினம் அரசு விடுமுறை தினமாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு முதல்வர் பேசினார்.
Topics :
Advertisement
Advertisement
Advertisement