'இறங்கி வந்தாள் சிறுவாணி....!' - தாகம் தீர்ந்த த(க)ண்ணீர் கதை!

'இறங்கி வந்தாள் சிறுவாணி....!' - தாகம் தீர்ந்த த(க)ண்ணீர் கதை!

Published:Updated:
'இறங்கி வந்தாள் சிறுவாணி....!' - தாகம் தீர்ந்த த(க)ண்ணீர் கதை!
'இறங்கி வந்தாள் சிறுவாணி....!' - தாகம் தீர்ந்த த(க)ண்ணீர் கதை!
0Comments
Share

தென்னிந்தியாவின் மான்செஸ்டர், நீலமலை அரசி, திருப்பூர் டாலர் சிட்டி என கோவையின் பெருமைகள் கணக்கில் அடங்காதவை. பேருந்தில் யாராவது காலை மிதித்தால்கூட, 'ஏங்க பார்த்து மிதிக்கக் கூடாதுங்களா?' என மரியாதையாகக் கண்டிக்கும் ஊர் கோவை மட்டும்தான். இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது, உலகின் இரண்டாவது சுவை மிகுந்த குடிநீர் எனப் பெயர் பெற்ற சிறுவாணி.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது மேட்டுப்பாளையம் பைபாஸ் சாலையின் ஓரத்தில்,  சிறுவாணி குடிநீர் குழாய்களின் அருகில் மக்கள் குடங்களோடு காத்துக் கிடப்பதும், சைக்கிள் ட்யூப்பில் இரண்டு குடங்களைக் கட்டிக் கொண்டு, சைக்கிளைத் தள்ளிக் கொண்டு போகும் ஆண்களையும் அப்போது சகஜமாகப் பார்க்கலாம். விளையாடிய களைப்பில் சிறுவாணி குழாய்களைத் திறந்து குளிர்ச்சி மேலிட, வாயை பைப்பின் ஓரத்தில் வைத்து குடித்த தண்ணீர் இன்றைக்கும் இனிக்கிறது. சமீபத்தில் அதே பைபாஸ் சாலையில் பயணித்தபோது, நான் ரசித்துக் குடித்த சிறுவாணி பைப்புகள் இருந்த இடத்தில் தனியார் கட்டடங்கள் எழும்பியிருந்தன. குடிநீர் குழாய்களைக் காணவில்லை. இப்போது விஷயத்துக்கு வருவோம்.

'இறங்கி வந்தாள் சிறுவாணி....!' - தாகம் தீர்ந்த த(க)ண்ணீர் கதை!

1929-ம் ஆண்டு ஏப்ரல் 29.  கோயம்புத்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. வீதிகள் தோறும் தண்ணீர்க் குழாய்களுக்கு மக்கள் பொட்டு வைத்து, பூக்களை சூட்டி இருந்தனர். பெரும்பாலோரின் கண்களில் ஆனந்த கண்ணீர். அன்றுதான் முதல்முறையாக கோவை நகரத்துக்கு சிறுவாணி தண்ணீர் வந்தது. இதற்குப் பின்னால் நாற்பது ஆண்டுகால போராட்டம் இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூர் மாவட்டம், அன்றைய மெட்ராஸ் மாகாணத்தின் ஒரு பகுதி. மெட்ராஸ் மாகாண பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர், 1927-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், 'மெட்ராஸ் மாகாணத்தின் தண்ணீரில் மிக மோசமான தண்ணீர் எதுவென்றால், அது கோயம்புத்தூரின் தண்ணீர்தான். இந்த மோசமான தண்ணீரால் மக்களுக்கு பொருள் இழப்பும், உடல் நல பாதிப்பும் ஏற்படுகிறது. மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதில் கோயம்புத்தூர் நகராட்சி தீவிர கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது' எனக் குறிப்பிட்டார்.

நொய்யல் நதி,  நகரத்துக்கு அருகில் ஓடினாலும் அதை குடிநீராக கொண்டுவரும் திட்டம் எதுவும் அன்று இல்லை. தவிர, அந்த நதியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரவில்லை. நகரத்துக்குள் இருந்த சில உப்புத் தண்ணீர் கிணறுகள் மட்டுமே மக்களின் நீர் ஆதாரமாக விளங்கின. தண்ணீர் தேவை குறித்து அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மக்கள் முறையிட்டார்கள். எதுவும் பலன் தராததால், குடிநீருக்கான போராட்டம் தொடங்கியது.

இந்த நேரத்தில்தான் எஸ்.பி.நரசிம்மலு நாயுடு என்ற பத்திரிகையாளர் களத்திற்கு வருகிறார். இவர் நடத்திய ஞானமாதா தினசரி பத்திரிகைதான் புலனாய்வு பத்திரிகையின் தொடக்கம் என்கிறார்கள். தாசில்தார்களும், நீதிபதிகளும் பணத்திற்கு மலினப்படுகிறார்கள் என இவர் எழுதிய கட்டுரைகள் அப்போது ரொம்பவே பிரசித்தம். பிரிட்டிஷ் அரசின் கவனத்திற்கு ஒரு விஷயத்தைக் கொண்டு போனார் நரசிம்மலு. 'சிறுவாணி மலைப் பகுதியில் உள்ள முத்திகுளம் அருவி நீரை கொண்டு வந்தால் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கலாம்' என்பதுதான் அது. மாவட்ட ஆட்சித் தலைவர், ‘அங்கெல்லாம் மனிதர்கள் செல்வது சிரமம். நீங்கள் ஆய்வு செய்து வந்தால் அரசாங்கம் பரிசீலிக்கும்’ என்றார் அலட்சியமாக. நரசிம்மலு அசரவில்லை. அந்தப் பயணத்திற்கும் தயாரானார். முத்திகுளம் அருவிக்கு செல்வது அவ்வளவு எளிதல்ல. அடர்ந்த வனப்பகுதி. இயற்கை எழில்கொஞ்சம் பிரதேசம். பலர் தடுத்தும் கேட்காமல் நரசிம்மலு நாயுடு தனது நண்பர்களுடன் கிளம்பினார். மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் தூரம் மலை ஏறிச் செல்ல வேண்டும். யானை, புலி, சிறுத்தை உள்ள காட்டுயிர்கள் அச்சுறுத்தின. பல நாட்கள் பயணித்து முத்திகுளம் அருவியை அடைந்தார் அவர்.

அருவியில் திரண்டு ஓடிவந்த நீரைப் பார்த்து பரவசமானார் நாயுடு. நண்பர்களுடன் தீவிரமாக ஆய்வு நடத்தி ஊர் திரும்பினார். மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து, 'அந்த அருவி நீரை நொய்யலுக்கு திருப்பினால் கோயம்புத்தூரின் தண்ணீர் பிரச்னை தீரும்' என்று அறிக்கை சமர்ப்பித்தார். 'நிதி ஆதாரம் இல்லை' என்று மறுத்தது அரசு. மக்களின் தொடர் போராட்டங்களால் 1892-ம் ஆண்டு ஒரு பொறியாளரை அரசு நியமித்தது. 'அவர் சிறுவாணி திட்டம் சாத்தியமில்லை' என்று சொல்லி, நொய்யல் நீரை பயன்படுத்த திட்டம் தீட்டினார். நொய்யல் நதியின் ஒரு பகுதியான வெள்ளலூர் அணைக்கட்டில் ஓரளவு நீர் இருப்பதால், அங்கிருந்து தண்ணீர் கொண்டு வர திட்டம் தந்தார். 'அதற்கும் நிதி இல்லை' என்று அரசு கைவிரித்தது. நொய்யலை மையமாக வைத்தே பல திட்டங்கள் தீட்டப்பட்டன. தட்டிக் கழிக்கப்பட்டன.

'இறங்கி வந்தாள் சிறுவாணி....!' - தாகம் தீர்ந்த த(க)ண்ணீர் கதை!

இந்த நேரத்தில், குடிநீர்ப் பஞ்சம் கோயம்புத்தூரில் தலைவிரித்தாடியது. ஒரு சொம்பு தண்ணீரைக் கொடுக்கவே மக்கள் தயங்கினார்கள். இதில், பத்தாண்டுகள் ஓடிய நிலையில் சிறுவாணி திட்டம்,  மீண்டும் முன்னெடுக்கப்பட்டது. இதன்பின்னணியில் பிரிட்டிஷாரின் சுயநலமும் இருந்தது. அப்போது இந்தியா முழுவதும் மின் உற்பத்திக்கான ஆய்வுகள் நடந்து வந்தன. சிறுவாணியிலும் ஆய்வு செய்தார்கள். திட்டம் வெற்றி பெற்றால் மின் உற்பத்தி மூலம் திட்டச் செலவை ஈடுகட்டிவிடலாம் என நம்பினார்கள். இதற்காக, தென்னிந்திய ரயில்வே நிறுவனம் (அப்போது அது தனியார் நிறுவனம்) சிறுவாணி நீர்மின் திட்டத்துக்கு உதவ முன்வந்தது. ஏனெனில் கோயம்புத்தூரில், ரயில்வே தொழிற்சாலை அமைக்கும் திட்டம் அந்நிறுவனத்துக்கு இருந்தது. இதுபற்றி ஆய்வு நடத்தியபோது, சிறுவாணியின் மழைப்பொழிவு குறித்து கேள்வி எழுந்ததால், திட்டம் கைவிடப்பட்டது.

1921-ம் ஆண்டு சி.எஸ். இரத்தினசபாபதி என்பவர் கோவை நகராட்சித் தலைவரானார். அவர் ஏற்கெனவே சிறுவாணி ஆய்வுகளில் பங்கு பெற்றவர். இந்த முறை அவரது இடைவிடாத முயற்சியால் திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்தது. 1924-ம் ஆண்டு சிறுவாணி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. வேகமாக பணிகள் தொடங்கின. சாலை, மின்சாரம், தொழில் நுட்பம் எதுவும் இல்லாத சூழலில் நகராட்சியின் நிதிப் பற்றாக்குறையால் அவ்வப்போது திட்டத்தின் செயல்பாடுகள் திணறியது. யானைகள், புலிகள், அட்டைப் பூச்சி, மலேரியா என தொழிலாளர்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டார்கள். ஏராளமான உயிர்ப் பலிகளும் ஏற்பட்டன. கூடவே, திட்டத்துக்கு எதிராக வழக்குகளும் போடப்பட்டன. மூன்று ஆண்டுகளில் மலை மேலிருந்து குகைப் பாதை மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணிகள் முடிந்தன. அப்போதுதான் அந்த விபரீதம் ஏற்பட்டது. 1927-ம் ஆண்டு கடுமையான மழை. கூடவே பெரும் நிலச்சரிவு. கட்டுமானங்கள், கருவிகள் எல்லாம் மண் மூடிப்போயின. '40 ஆண்டு கால போராட்டம் வீணாகிப்போனதே' என்ற மக்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள்.

ஆனால், அந்த எண்ணமே திட்டத்துக்கு மீண்டும் உத்வேகமூட்டியது. மீண்டும் பணிகள் தொடங்கின. மக்களும் சேர்ந்து உழைத்தார்கள். 1929-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ல் கோயம்புத்தூரின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக மலையில் இருந்து இறங்கி வந்தாள் சிறுவாணி. மக்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள்.

-தொகுப்பு: ஆ.விஜயானந்த்
(ஆதாரம்: சிறுவாணி - கோவையின் குடிநீர் நூல்)